வவுனியாவில் யானையின் தாக்குதல் - கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

வவுனியாவில் யானையின் தாக்குதல் - கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

வவுனியா, மே 21 –

வவுனியா மாவட்டத்தின் கண்ணாடிக்கணேசபுரம் கிராம மக்கள், காட்டு யானையின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி இன்று (21) மதியம் சடலத்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம், கடந்த மே 19ஆம் திகதி இரவு காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த 63 வயது சுப்பிரமணியம் என்ற கிராமவாசியின் இறுதிக்கிரியையின் போது முன்னெடுக்கப்பட்டது. சம்பவத்தின்போது அவர் தனது வீடு அருகிலுள்ள கடைக்கு சென்றிருந்த வேளையில், வீதிக்கரையில் நின்றிருந்த காட்டு யானை அவரை தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவரின் உடலை முன்வைத்து, "உயிரை பாதுகாக்க வழி சொல்", "விவசாயத்தினை காப்பாற்று", "அரசே, காட்டு யானைக்கு ஒரு தீர்வு சொல்" உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் யானையின் தாக்குதல் - கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

மாலை 5 மணி பிறகு வெளியே செல்ல முடியாத நிலை

போராட்டத்தில் ஈடுபட்ட கிராமவாசிகள் தெரிவித்ததாவது, சூரியன் அஸ்தமிக்க ஆரம்பிக்கும் நேரத்தில், அதாவது மாலை 5 மணிக்கே காட்டு யானைகள் கிராமத்துக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன் வீதியோரங்களில் நின்று பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனால் மாலை நேரத்தில் மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள்.

மேலும், இதுபோன்ற யானை அட்டகாசங்கள் கடந்த காலங்களில் குறைவாகவே இருந்ததாகவும், தற்போது வேறு பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி எமது கிராம எல்லைகளில் விடப்படுவதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

நிரந்தரத் தீர்வு வேண்டும்

இவ்வாறான சம்பவங்களை தடுக்க நிரந்தர தீர்வு எடுக்கப்பட வேண்டும் எனவும், உயிரிழந்த சுப்பிரமணியம் அவர்களுக்கு நீதியும் வழங்கப்பட வேண்டும் எனவும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் பெரிதென வவுனியா வட்டாரத்தில் பொதுமக்கள் கருதுகின்றனர்.

Post a Comment

0 Comments